முன்னுரை மற்றும் எச்சரிக்கை¶
எனக்கு சுமார் பதினான்கு அல்லது பதினைந்து வயதாக இருந்தபோது, பண்டைய நூல்களில் விவரிக்கப்பட்ட ஆரம்பகால தியான அனுபவங்களில் சிலவற்றை தற்செயலாக நான் சந்தித்தேன், அதன் மூலம் எனது விருப்பமில்லாத ஆன்மீகத் தேடல் தொடங்கியது. என்ன நடந்தது என்று நான் உணரவில்லை, நான் திரும்பி வர முடியாத ஒரு புள்ளியைக் கடந்துவிட்டேன் என்பதும் எனக்குத் தெரியவில்லை, அதை நான் பின்னர் "எழுச்சி மற்றும் மறைவு" (A&P) என்று அழைத்தேன். எனக்கு பிரகாசமான விளக்குகளுடன் ஒரு விசித்திரமான கனவு வந்தது, என் முழு உடலும் உலகமும் வானவேடிக்கை போல வெடித்துச் சிதறியது, அதன் பிறகு நான் எதையோ தேட வேண்டியிருந்தது, ஆனால் அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை.
அன்றிலிருந்து, தங்கள் வாழ்வின் ஆரம்பத்திலேயே பல்வேறு சூழ்நிலைகளில், தியானப் பயிற்சியுடன் முற்றிலும் தொடர்பில்லாத பலரும் இந்த A&P-ஐக் கடந்துள்ளதை நான் சந்தித்திருக்கிறேன். இது குறிப்பாகச் சிறப்பு வாய்ந்ததோ அல்லது அசாதாரணமானதோ அல்ல என்பது தெரியவந்தது, மேலும் நான் இப்போது இதை மனிதனின் நிலையான புலனுணர்வு வளர்ச்சியின் ஒரு பகுதியாகவே கருதுகிறேன். இருப்பினும், அந்த நேரத்தில், அதற்கு முறையான வார்த்தைகள் இல்லாததாலும், அதை எங்கு பொருத்துவது என்ற சூழல் இல்லாததாலும், அது என்னவென்றே தெரியாததாலும், நான் அதைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. "என்ன செய்வதென்று தெரியாத மற்ற விசித்திரமான விஷயங்கள்" என்ற நினைவுகளின் மனத் கோப்புக்குள் அது சேர்க்கப்பட்டது; அந்தக் கோப்புக்கு அடுத்த பத்து ஆண்டுகளுக்கு எந்த அர்த்தமும் இருக்கப்போவதில்லை. என் ஆழ்ந்த ஆன்மீகப் பிரச்சினைகளை எந்த அளவிலான சிந்தனையும் தீர்க்கப் போவதில்லை என்பதையும், ஏற்கெனவே தொடங்கிய பயிற்சியின் சுழற்சியை நிறைவு செய்ய வேண்டும் என்பதையும் நான் இறுதியாக உணரும் வரை, பல ஆண்டுகளாக நான் தீவிரமாகத் தத்துவம் பேசிக்கொண்டிருந்தேன்.
என்னை சவுண்ட் டெக் மற்றும் ரோடியாகப் பணியமர்த்திய மோட்டவுன் மற்றும் சோல் இசைக்குழுவில் பேஸ் வாசித்த கென்னத் ஃபோக் என்ற நண்பர் எனக்கு இருந்தார். நாங்கள் கல்லூரியில் நான் முதலாம் ஆண்டு படித்தபோது சந்தித்தோம், இறுதியில் நான் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது, வட கரோலினாவின் சேப்பல் ஹில்லில் உள்ள ஒரு மோசமான சிறிய இசைக்குழு வீட்டில் சக குடியிருப்பாளர்களானோம். அவரும் ஒரு இதேபோன்ற நிலையில் இருந்தார், பிற்காலத்தில் நாங்கள் "இருண்ட இரவு" மற்றும் பிற பெயர்களில் அழைக்கவிருந்த ஒன்றில் என்னையும் போல சிக்கியிருந்தார். கலிஃபோர்னியாவிலிருந்து வட கரோலினாவுக்குக் குடிபெயர்வதற்கு முன்பு அவர் A&P-ஐக் கடந்துவிட்டார், அது அவருடைய வாழ்க்கையைப் பல வழிகளில் மாற்றியிருந்தது. இறுதியில், தர்க்கமும் அறிவாற்றல் மறுசீரமைப்பும் நமக்கு உதவப் போவதில்லை என்பதையும் அவர் உணர்ந்தார்.
நாங்கள் இரவில் தாமதமாக ஃபிரிஸ்பீ விளையாடுவதிலும் தத்துவம் பேசுவதிலும் அதிக நேரத்தைச் செலவிட்டோம், இறுதியாக, அதே நிலையை அடைந்த மற்ற தத்துவஞானிகள் என்ன செய்தார்கள் என்பதைக் கவனமாகப் பார்க்கத் தொடங்கினோம், மேலும் எங்களுக்குப் பிடித்த சிலர் மர்மமான (பகுத்தறிவிர்க்கு அப்பார்ப்பட்ட) நடைமுறைகளை நாடியதைக் கவனித்தோம். நேரடி அனுபவத்திலிருந்து எழும் ஏகார்த்த ஞானமே செல்ல வேண்டிய ஒரே வழி என்று நாங்கள் பகுத்தறிந்தோம், ஆனால் அந்த வகையான ஞானத்தைப் பெறுவது ஒரு அச்சுறுத்தலான, இல்லையென்றால் சாத்தியமற்ற பணியாகத் தோன்றியது.
கென்னத் தனது ஆன்மீக நெருக்கடியில் சற்று முன்னேறியிருந்தார், இறுதியில் தீவிர தியான முயற்சி செய்வதைத் தவிர வேறு வழியில்லை. அவர் இசைத் தொழிலை விட்டுவிட்டு, கலிபோர்னியாவின் ஹெமெட் அருகே உள்ள வின்செஸ்டர் என்ற சிறிய விவசாயப் பாலைவன நகரத்திற்குத் திரும்பினார். தனது ஆன்மீகத் தேடலை ஆழப்படுத்திக் கொள்ள பணத்தைச் சேமிப்பதற்காக, தனது பெற்றோர் வைத்திருந்த பாழடைந்த ஒரு பழைய மொபைல் ஹோமில் வாழ்ந்து, பீட்சா டெலிவரி செய்து பணத்தைச் சேர்த்தார். மேலும், அவருக்கு பில் ஹாமில்டன் என்ற நபரைச் சந்திக்கும் அதிர்ஷ்டமும் கிடைத்தது. பில்லின் சற்றே தீவிரமான ஆலோசனையின் பேரில், கென்னத் மூன்று மாத கால தீவிர நுண்ணறிவு தியான முகாமில் பங்கேற்றார், பின்னர் பர்மிய தேரவாத புத்த மரபில் உள்ள தியான ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஒரு வருட தீவிரப் பயிற்சிக்காக ஆசியாவிற்குச் சென்றார். அவர் திரும்பி வந்தபோது, அவரது பயிற்சியின் நன்மைகள் எனக்கு வெளிப்படையாகத் தெரிந்தன, மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு நானும் அதே பாதையைப் பின்பற்ற முயற்சிக்கத் தொடங்கினேன்.
1994-ல், நான் தீவிர தியான முகாம்களுக்குச் செல்லத் தொடங்கினேன் மற்றும் நிறைய தினசரிப் பயிற்சிகளைச் செய்தேன். எனக்கும் சில மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான அனுபவங்கள் ஏற்பட்டன, மேலும் எப்படி முன்னேறுவது மற்றும் விஷயங்களைச் சரியான கண்ணோட்டத்தில் வைத்திருப்பது என்பது குறித்த கூடுதல் வழிகாட்டுதலுக்காகத் தேடத் தொடங்கினேன். நல்ல ஆசிரியர்கள் அரிதாகவே இருந்தனர், அவர்களின் நேரம் குறைவாகவும், அவர்களைச் சந்திப்பது பெரும்பாலும் செலவு மிக்கதாகவும் இருந்தது. மேலும், எனது கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்கும்போது, பெரும்பாலும் எச்சரிக்கையாகவும், மறைபொருளாகவும் இருந்தது. எனது பழைய இசை நண்பர் கூட, தாம் அறிந்திருந்த பெரும்பாலான விஷயங்களைத் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டிருந்தார். தியானக் கோட்பாடு மற்றும் தனிப்பட்ட பயிற்சி விவரங்களை வெளிப்படுத்துவது தொடர்பான பிரச்சினைகள், எங்கள் நட்பை இழந்துவிடும் நிலைக்குக் கொண்டு சென்றன.
மனம் சோர்ந்து, நான் புத்தகங்களை நாடினேன். முற்றிலும் எனது முந்தைய அனுபவத்திற்கு அப்பாற்பட்ட ஒரு துறையில் திறமையாகச் செயல்பட உதவும் கருத்தியல் கட்டமைப்புகளைத் தேடி, நவீன மற்றும் பழங்கால நூல்களை விரிவாகப் படித்தேன், நுணுக்கமாக ஆராய்ந்தேன். பெருகிவரும் எண்ணிக்கையிலான சிறந்த மற்றும் விரிவான தர்மப் புத்தகங்கள் கிடைத்தபோதிலும், அவை மிகவும் முக்கியமான பல விவரங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தன என்பதை நான் கண்டறிந்தேன். மிகவும் இலட்சியவாதமான அல்லது முழுமையாக விளக்கப்படாத கருத்தியல் கட்டமைப்புகளைப் பயன்படுத்துவது, எதையும் பயன்படுத்தாமல் இருப்பதைப் போல மோசமானதாக இருக்கக்கூடும் என்பதை நான் கடுமையான அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்டேன். மேலும், முன்னேற்றம் பற்றிய பல கோட்பாடுகளில் இருந்த இலட்சியங்களும் கட்டுக்கதைகளும், நான் எவ்வளவு விரும்பியபோதிலும், யதார்த்தப் பரிசோதனையில் நிலைத்திருக்கவில்லை என்பதையும் நான் கண்டறிந்தேன். கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இந்த முரண்பாடு பல ஆண்டுகளாக எவ்வாறு உருமாறியுள்ளது என்பதன் சிக்கலான தன்மைகள் விமர்சனத்திற்குரியவை, மேலும் சில முக்கியமான சொற்களையும் கருத்துக்களையும் நான் அமைத்த பிறகு இதைப் பற்றிப் பிறகு விவாதிப்பேன்.
அந்தப் புத்தர்கள் நிறைய நல்ல விஷயங்களைக் கண்டறிந்துள்ளனர் என்ற ஆழ்ந்த ஞானம் எனக்கு ஏற்பட்டது. அவர்கள் மிகவும் எளிய நுட்பங்களைக் கண்டறிந்துள்ளனர், அவற்றை நீங்கள் வழிமுறைகளைப் பின்பற்றி, உங்களுக்கு ஏற்ற அளவில் சரிசெய்து செய்தால், நேரடியாக குறிப்பிடத்தக்க முடிவுகளைப் பெறலாம். ஒரு விஷயத்தைப் பற்றி மேலும் அறிய விரும்பினால், அதில் கவனமாகக் கவனம் செலுத்த வேண்டும் என்ற அடிப்படைக் கருத்து, ஒரு எளிய, நேர்த்தியான பிரகாசத்தைக் கொண்டுள்ளது. என் அனுபவத்தைப் பற்றி ஒரு முக்கியமான விஷயத்தை நான் தெரிந்துகொள்ள விரும்பினேன், அதனால் நான் அதில் அதிக கவனம் செலுத்தி அதைப் பற்றி அறிந்துகொண்டேன். அது அப்போது அர்த்தமுள்ளதாக இருந்தது, இப்போதும் இருக்கிறது. தியானத்திற்கான இந்த சமையல் குறிப்புகள் போன்ற அணுகுமுறையை சிலர் விரும்பவில்லை என்றாலும், அவை எனக்கு வழங்கிய வெற்றிகளுக்காக எனது ஆழ்ந்த நன்றியை வெளிப்படுத்த வார்த்தைகள் போதாது. அனுபவவாதம் எப்போதுமே எனக்குப் பிடித்திருந்தது, மேலும் அதன் சிறந்த நிலையில் புத்த தியானம், நீங்களே நேரில் காண அனுமதிக்கிறது.
இவ்வாறு புத்தர் மற்றும் அவரைப் பின்பற்றியவர்களின் எளிய மற்றும் பழய நடைமுறைகள் நான் தேடியவைகளை மென்மேலும் வெளிப்படுத்தின. எனது அனுபவங்கள் நூல்கள் மற்றும் போதனைகளில் உள்ள இடைவெளிகளை நிரப்பி, புத்த கோட்பாட்டில் பரவியுள்ள கட்டுக்கதைகளை நீக்கி மற்றும் தியான ஆசான்கள் வழமையாக தங்களுக்குள்யே வைத்திருக்கும் மறைபொருட்களை வெளிப்படுத்தியதைக் கண்டேன். நான் தேடிக்கொண்டிருந்த நூலை, இப்போது உங்கள் கைகளில் வைத்திருக்கும் இந்நூலை எழுத ஆயத்தமான ஒரு நிலைக்கு இறுதியாக வந்தடைந்தேன்.
இந்நூல் புத்தரின் உட்கருசெறிந்த போதனைகளில் தேர்ச்சி பெற விரும்பி தேவையான நேரத்தையும் முயற்சியையும் செலவிட தயாராக உள்ளோருக்கானது, புதிய மற்றும் பழைய அறநூல்களில் அடிக்கடி காணப்படும் குறியீடுகளைக் கண்டு அலுத்துப் போனவர்களுக்குமானது. ஏனெனில் அவை புரிந்து கொள்ள ஏதுவாக நேர்மையாகவும், வெளிப்படையாகவும், நேரடியாகவும், கடுமையான நுட்பதேற்றுடனும் இருக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. பல வர்ணனைகள் போல பாளி நியதியில் உள்ள நூல்களில், இது புத்தர் கற்பித்த மூன்று அடிப்படை பயிற்சிகளின் வழிகளில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது: ஒழுக்கம், செறிவு மற்றும் ஞானம்.
நான் இந்நூல் முழுவதும், முடிந்தவரை பயனுள்ள மற்றும் தினசரி நடைமுறையில் அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் வகையில் எழுத முயற்சித்துள்ளேன். சில வித்தியாசங்களை ஏற்படுத்தும் விதத்தில் எப்படி "அடைதல்" என்பதை எப்போதும் வலியுறுத்தியுள்ளேன். இந்நூலின் எல்லாப் பிரிவுகளிளும் உங்களுக்கு ஓரளவுக்கு தியானப் பயிற்சி இருப்பதாகவும், ஏதாவது ஒரு ஆன்மீக நிகழ்வில் புழங்குவதாகவும், மேலும் நிலையான/திடமான அறமொழிநடையைப் பற்றி ஓரளவு அறிவிருப்பதாகவும் அனுமானித்துள்ளேன். நீங்கள் தியானத்தில் சிறக்க முயற்சி செய்யத் தயாராக உள்ளீர்கள் என்று எல்லாப் பிரிவுகளிளும் அனுமானித்துள்ளேன்.
தியானக் கையேடாகவும், ஆன்மீகப் பாதையில் நடப்பதற்காகவும் இந்நூல் தனித்து நிற்கும் வகையில் போதுமான தகவல்களைச் சேர்க்க முயற்சித்தேன். இருப்பினும், எனது முக்கியத் திறன்களாக நான் கருதும் பகுதிகளிலும், இதற்கு முன் வந்த படைப்புகளில் நான் அறிந்தவரை போதுமான அளவு உள்ளடக்கப்படாத ஆன்மீகப் பகுதிகளிலும் கவனம் செலுத்த முயற்சித்திருக்கிறேன். நுட்பம், தியானவழிகள் மற்றும் உயர்நிலை பயிற்சியின் நுண்ணிய விவரங்களை விளக்குவதில் இந்நூல் ஒளிர்கிறது. இருப்பினும், ஆன்மிக வாழ்வு என்பது அளவிட முடியாதது மற்றுமின்றி ஒரு புத்தகத்தில் போதுமான அளவு விவரிக்க முடியாதும் கூட. எனவே இதை தியானம் அல்லது ஆன்மீக நடைமுறைகளின் முழுமையான கலைக்களஞ்சியம் ஆக்க சிறிது கூட நான் முயற்சிக்கவில்லை. எனவே, மற்ற ஆசிரியர்களால் ஏற்கனவே நன்றாக (மற்றும் என்னால் முடிந்ததை விட சிறப்பாக) உள்ளடக்கப்பட்டதாக நான் கருதும் தலைப்புகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கும் மற்ற சிறந்த குறிப்புகளுக்கும் நான் பலவிடங்களில் உங்களைப் பரிந்துரைத்துள்ளேன். அனைத்து குறிப்புகளையும் ஆலோசிக்க இல்லாவிடிலும், குறைந்தபட்சம் சிலவற்றையாவது ஆலோசிக்க பரிந்துரைக்கிறேன்.
எனது தனிப்பட்ட பயிற்சி இந்நூலின் மீது ஏற்ப்படுதிய தாக்கத்தைப் போலவே, மறைந்த பர்மிய தியான ஆசான் மற்றும் தேரவாத மரபில் அறிஞரான மகாசி சயாதவ் மற்றும் அவரது மரபினர் மற்றும் அதற்கு அப்பார்ப்பட்டவரின் போதனைகள் இந்நூலின் மீது பெரிய தாக்கத்தை ஏற்ப்படுதியுள்ளன. இந்நூலில் மற்ற சிறந்த ஆன்மீக மரபுகளைப் பற்றியும் (புத்த மற்றும் புத்த அல்லாத) பல குறிப்புகள் உள்ளன. விடாமுயற்சியுடன் தியானத்தைப் பயிலும் அனைத்து மாணவர்களும் தங்கள் நடைமுறைப்பயிற்சிக்கு ஏற்ப ஏதாவது ஒன்றை இந்நூலில் கற்க வேண்டும் என்பது எனது உண்மையான விருப்பம். அவ்வாறு நடைமுறைக்கு ஏற்ற வங்குமையையே நான் பெரிதும் போற்றுகிறேன்.
நிகழ்பயன்வாதத்தைப் பற்றி பேசுகையில், இந்நூலின் தலைப்பு "புத்தர்" என்ற சொல் கொண்டிருப்பதில் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் உள்ளன. ஏனெனில் இது பகுத்தறிவு மற்றும் நுண்ணாராய்ச்சி உள்ளுறுமங்களைக் கற்று தம் மூளையையும் அது சிந்தித்துணரும் விதத்தை/வழிகளை சீரமைக்கும் ஆழமான, பயனுள்ள விஷயங்களைக் கற்க விரும்பும் பலரை அந்நியப்படுத்தும். இந்நூலின் பெயரில் சித்தப்பு "சித்" பெயர் இருப்பது பல்வேறு வகையான மக்களின் மனதில் ஐயமெமெழுப்பலாம். அம்மக்கள் அறுதி-பகுத்தறிவு-விஞ்ஞானப்பொருள்முதல்வாதம் கடைபிடிப்பவராகவோ அல்லது அதற்கு பிறமுனைக்கு ஈடான தீவிர அமெரிக்க தெற்கு கிறுத்துவராகவோ அல்லது வேறு எவராக இருக்கக்கூடும். மேலும், அவ்வப்போது சாட்டையடி போல் உணரவைக்கும் எனது விளக்கம் சில புத்தர்களைக்கூட மதிப்புமிக்க புத்த தியானம் மற்றும் கருத்தியல் நுட்பத்திற்கு எதிர்மறையான எதிர்வினையை காட்டத்தூண்டும். பொரிம்பு மற்றும் கூட்ட விசுவாசத்தின் இந்த பரந்த பிரச்சனை கிட்டத்தட்ட எல்லா மனிதர்களிடையேயும் உள்ளது. நான் கூறும் ஏதோ ஒரு கருத்து உங்கள் குறிப்பிட்ட புத்த அல்லது அதைப்போன்ற மத முத்திரையின் மீது உங்களுக்குள்ள கடுமையான விசுவாசத்தின் அடிப்படையில் உங்கள் மனதைப் புண்படுத்துவதாக நினைத்து, உங்களுக்கு அதிகாரமளிக்கும் என் சொற்களை நீங்கள் நிராகரித்து, அவற்றை உங்கள் நன்மைக்காகப் பயன்படுத்தத் தவறினால், முதற்பட்ட இழப்பு உங்களுடையதாகவே இருக்கும். அவ்வகையான உங்கள் மனநிலை உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும். இந்நூலில் நீங்கள் எவ்வளவு தூரம் செல்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக இந்தத் தாக்கம் வலுப்பெறும். ஆனால் அது என் சாதுரியமின்மையின் காரணமாக இருந்தால் முன்கூட்டியே என்னை மன்னிக்கவும்.
வைரங்களை பாறைகளிருந்து பிரித்தெடுப்பதைப்போல் செயல்முறை அறத்தைக் கற்றலில்லுள்ள சிக்கல் நடைமுறைப் படுதக்கூடிய, அனைத்தளாவிய, பொருந்தக்கூடிய, நுட்ப, உதவக்கூடிய, பயனுள்ள வழிகள் மற்றும் வாய்மைகளிலுருந்து வகைபிரித்தெடுதலில் உள்ள ஒரு நிரந்தரச் சிக்கல். அது வறட்டுக் கோட்பாடு, தனியுரிம பொரிம்பு, தெளிவற்ற மற்றும் அந்நியப்படுத்தும் சொற்கள், மத வெறி, பண்டைய காரணமற்ற முடக்கங்கள், பழமையான பரத்தோற்றங்கள், எளிநிலை மற்றும் துல்லியமற்ற உயிரியல் அனுமானங்கள், தேவையற்ற இறுக்கமான/விறைப்பான கட்டமைப்புகள் மற்றும் பழைய (மற்றும் புதிய) மரபுகளின் பிற போகூழ் அம்சங்களில் அடைபடாத/சிக்காத ய்மைகளிலுருந்து வகைபிரித்தெடுதலிலும் உள்ள ஒரு நிரந்தரச் சிக்கல். எந்தப் பின்னணியில் இந்தப் பணிக்கு வந்தாலும் ஓரளவுக்கு நம்மை மட்டுப்படுத்திவிடும் என்பதால், பெரும்பாலான சமயங்களில் அது சரியாகப் புரியாது என்பதையுணர்ந்து, கவனத்துடனும் நுண்ணறிவுடனும் புலனாய்வு செய்ய வேண்டும். இது எனக்கு பொருந்துவது போலவே யாவருக்கும் பொருந்தும். எனவே, பழைய நூல்கள், மரபுகள், நுட்பங்கள், சமூகங்கள், பண்பாடுகள், சொற்களஞ்சியங்கள் மற்றும் கருத்தியல் கட்டமைப்புகளுக்குள் சென்று ஆராயக்கூடியவர்களுக்கு, அவ்வகையான கட்டமைப்பை ஏற்ப்படுத்திய அம்மக்கள் தாம் செய்தது மிகவும் சிறப்பானது என எண்ணி ஏன் மிகவும் உற்சாகமடைந்தார்கள் (அக்காலத்திற்க்கு சிறப்பானதாக இருந்திருக்கலாம்), என்பதைத் தெரிந்துகொள்ள விழைந்தால், உங்களுக்கு ஒரு வளமான அகப்பாட்டுப் பயணம் எதிர்காத்துள்ளது.
என்னுடைய ஒரு பக்கம், முற்றிலும் மதச்சார்பற்ற, எந்தப் பழங்காலக் கட்டமைப்புகள் பற்றிய வெளிப்படையான குறிப்பும் இல்லாத, மதம் சார்ந்த அனைத்தையும் முற்றிலும் துடைத்தெறியப்பட்ட, எந்த விதத்திலும் ஆதிக்கம் செலுத்தும் மொழியியல் உணர்வுகளுக்குப் புறம்பான எந்தச் சொல்லும் இல்லாத ஒரு நூலை எழுத விழைகிறது. இந்நூல் அவ்வாறான விதிமுறைகளிலிருந்து விடுபட்டிருந்தால், பள்ளிகளில் பொதுப் பாடப்புத்தகமாகவும், அறிவியல் ஆய்வுக்காகவும் அதன் மத மற்றும் ஆன்மீகக் குறிப்புகள் தொடர்பான சிவப்புக் கொடிகளை உயர்த்தாமல், இது ஒரு பொதுப் பாடப்புத்தகமாக இருக்கும் என்று நான் அப்பாவியாக கற்பனை செய்கிறேன்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மிக ஆழமாக வளர்ந்த, உயர்நுட்ப, பயனுள்ள, காலம் நின்ற, மற்றும் மனதைப் பயிற்றுவிக்கும் மரபுகள் மற்றும் நுண்ணறிவுகளில் பெரும்பாலானவை பெண்பள்ளிகள், தவச்சாலைகள், காட்டு குடில்கள், மலைக் குகைகள் போன்ற இடங்களில் இருந்தே வந்தவை என்பதை அறிந்த எனது மறுபக்கம் இதற்கு எதிராக சமமாக கிளர்ச்சி செய்கின்றது. அவர்கள் வெளிப்படையான மத மற்றும் ஆன்மீக மரபுகளின் கட்டமைப்பில் தியானப் பயிற்சி பெற்ற தனிநபர்கள். அவர்களில் பெரும்பாலோர் நீங்கள் உண்மையிலேயே உலகத் தரம் வாய்ந்த மொழியியல் திறன்களைக் கொண்டிருக்காவிட்டால் உங்களுக்கு வசதியான மொழிகளில் கோப்புகளை எழுதியிருக்க வாய்ப்பில்லை. நீங்கள் தேடுவதைக் கண்டுபிடிக்க, பழைய மரபுகளில் உள்ள கலைப்பொருட்களின் பரந்த, சிக்கலான, வளமான புதையல்களை ஆராய்வதற்கு மாற்றாக எதுவும் இல்லை. அந்த மாபெரும் கோட்பாடு மற்றும் நுட்பப் பயிற்சி மொழியியல் கோணத்திலும் பண்பாட்டுக் கோணத்திலும் மொழிபெயர்க்கப்படும் வரை (அது நிகழ வாய்ப்பில்லை) நாம் பண்டைய மற்றும் இக்கால, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு, மற்றும் விசித்திரமான பழக்கப்பட்ட மற்றும் அன்னிய கலப்பினத்தில் இருப்போம். நற்பேறாக, நீங்கள் கலாச்சார பாதுகாப்பு வீரராக இல்லாமல் (உங்கள் இக்கால கலாச்சாரம் அல்லது பழங்கால கலாச்சாரம்) நடைமுறைவாதியின் அணுகுமுறையை நீங்கள் பின்பற்ற விரும்பினால், நீங்களும் உங்கள் மனதைப் பயிற்றுவிக்கும் சமூக வட்டங்களில் உள்ளவர்களும் நீங்கள் உங்கள் பயிற்சிகளின் மூலம் கண்டுபிடிப்பதில் இருந்து பயனடையலாம்.
எனது சொந்த அனுபவங்களில் சிலவற்றைப் பல்வேறு இடங்களில் சேர்த்து, அவற்றைப் பெயரிட்டுள்ளேன். வெற்றிகள் மற்றும் தோல்விகள் இரண்டிலும் சாத்தியமானவற்றின் உள்ளமையின் சில உணர்வைச் சேர்க்க முயற்சிக்க இது செய்யப்பட்டுள்ளது. அவை தேற்றத்திற்கு மனித பரிமானத்தைச் சேர்க்கும். இருப்பினும், இந்தக் கதைகள் உங்களுக்குத் தடையாக இருப்பதாக எண்ணினாலோ அல்லது "எனது தனிப்பட்ட ஆன்மீகத் தேடலைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்ற தரம் மிகையாக இருப்பதாகத் தோன்றினால், தயவு செய்து எங்கள் நம்இருவருக்கும் உதவி செய்து, ஒரு நொடியும் வீணடிக்காமல் அவற்றைத் தவிர்க்கவும். இவ்விரண்டாம் பதிப்பில், கதையை அதிகம் விரும்புவோருக்கு மிகவும் விரிவான சுயசரிதைப் பகுதியைச் சேர்த்துள்ளேன். ஆனால் அது எல்லோருக்கும் விருப்பமானதாக இருக்காது என்பதை நான் உணர்ந்து, தேற்றம் மற்றும் நடைமுறையின் முக்கிய பகுதிகளில் அதை தவிர்த்து, இந்த அற்புதமான மனவள பிரதேசத்தில் உடனொத்த பயிற்சியாளர்களின் அனுபவங்களைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலம் நான் பெற்ற சுருக்கமான ஆலோசனையை உங்களுக்கு வழங்கியுள்ளேன்.
என்னுடைய சொந்தக் உணர்வில் இப்புத்தகத்தையும் எழுதியிருக்கிறேன். இப்படைப்பைப் படித்தவர்களும் என்னை அறிந்தவர்களும் என் குரலையே கேட்கமுடிகிறது எனச் சொல்கிறார்கள். தியான நுட்பங்களை என்னால் இயன்றவரை என்னுடைய பல உணர்ச்சித் தடுமாற்றங்களைத் தவிர்த்து வெளிப்படையாக எழுதியுள்ளேன். எழுதும் எவரும் தங்கள் உணர்ச்சித் தடுமாற்றங்களை தம் எழுத்திலிருந்து மறைக்க முயற்சித்தாலும் அதில் சிலவற்றை தன்னையறியாமல் எழுதி வைக்கிறார்கள் என்று நான் உறுதியாகக் கூறுவேன். எனவே அவை புறம்சாராக மறைக்கப்படுவதை விட குறைந்த பட்சம் நீங்கள் அதை தெளிவாக காணமுடியும். இவ்வகையான உணர்வில்லாமல் கோட்பாட்டை மட்டுமே கொண்ட புத்தகத்தை நீங்கள் விரும்பினால், அவ்வாறு தேர்ந்தெடுக்கக் கூடிய பல நூல்கள் உள்ளன, அவற்றை நானே இந்நூலின் பல பகுதிகளில் குறிப்பிட்டுள்ளேன்.
இந்நூலில் நான் ஒரு சிறிய சமூக வர்ணனையையும் சேர்த்துள்ளேன். உங்களில் சிலருக்கு இது உதவாதது மட்டுமல்ல, மிகவும் அருவருப்பாகவும் இருக்கலாம், மனச்சலிப்பையும் ஏற்படுத்தலாம். உங்களில் சிலர் அதை கடுமையான அல்லது தவறான பேச்சு என்று விரைவில் நிராகரிக்கலாம். அவற்றில் அனைவருக்கும் உதவக்கூடிய சில முக்கிய உள்ளுருமங்கள் உள்ளன என்ற உணர்வுக்கும், அத்தகைய வலுவான சொற்களில் வழங்கப்பட்ட உள்ளுருமங்கள் மற்றும் கருத்துக்கள் அனைவரும் சிறப்பாக பயன்படுத்த முடியாது என்ற உணர்வுக்கும் நடுவே நான் சிக்கித் தவித்தேன் என்பதே உண்மை. எனவே, உங்களுக்கு அவை உதவிகரமாக இல்லை என்றால் தயவு செய்து அப்பிரிவுகளை தவிர்த்து, அவற்றைத் தாண்டி எளிதான அல்லது அதிக நுட்பங்களை விளக்கும் பிரிவுகளை வாசிக்குமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு செய்வதற்கு வசதியாக, உணர்ச்சியைக் கிளறக்கூடிய அப்பிரிவுகளை கண்டுகொள்ள தலைப்புகளில் மின்னல் சின்னத்தைச் சேர்த்துள்ளேன், அதன் மூலம் உங்களுக்கு வேண்டியவாறு பயண்படுத்திக் கொள்ளுங்கள்.
அப்பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளுருமங்கள் முக்கியம், உண்மை, பயனுள்ளவை என நான் எண்ணினாலும் அவை அவற்றின் பின்வரும் பிரிவுகளைப் புரிந்துகொள்வதற்கு முற்றிலும் அவசியமில்லை. அறத்தை மெய்யுணர்தும் நூல்களால் இவ்வுலகம் நிரம்பியிருக்கிறது. இருப்பினும், சில சமயங்களில் அதன் உட்பொருளை வேறொரு தனித்த கோணத்தில் வெளிப்படுத்தும் நூல்கள் இன்னும் இயற்றப்பட வேண்டுமென நான் நம்புகிறேன். அத்தனித்தன்மை எவ்வளவு என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை பயிற்ச்சியாளர்களான உங்களுக்கு நான் மரியாதை நிமித்தத்துடன் தருகிறேன். தம் ஆன்மீக தேடலுக்கு ஒரு துறவி போல் ஜப மாலை மற்றும் செருப்ப அணிவதற்கு பதிலாக கூர்முனை பொருத்திய போர் காலணிகளை அணிந்து; முதலாளித்துவ அமெரிக்க மதிப்புகள் மற்றும் உயரடுக்கு கல்வியாளர்களுக்கு எதிராக உதித்த "Beat" புலவரிடம் பயிலாமல்; மண்ணில் புதைந்தெழுந்த போலிச்சாமியாரிடம் அறபோதனை பெறாமல் தன் போக்கில் அறத்தைத் தேடிக்கற்ற தலைமுறையைச் சேர்ந்த ஒருவரின் கட்டுப்பாடற்ற குரல் இது. சில நவீன போலிச்சாமியார்களைப் போல் இல்லாமல் மெய்யுணர்தலுக்காக முழுமையான மற்றும் மிஞ்சப்படாத திருந்தகைமை கொண்ட அறைகூவும் மரபுசார் அறப் பயிற்சிக்கு தன்னை அர்ப்பணித்த ஒருவரின் கட்டுப்பாடற்ற குரல் இது. இவ்வகையான அறத்தேடல் உங்களிடம் இல்லையெனில், இந்நூலைப் படிக்க வேண்டாம்.
உயர்வாகக் கருதப்படும் ஒரு மூத்த (பெயரிலா) தியான ஆசிரியர் மற்றும் அறிஞராக இந்நூலின் முந்தைய வரைவை மேலோட்டமாக வாசித்தபின், "பெரும்பாலான புத்தர்கள் வயதாகும் பூமர்கள் அங்கிள்ஸ்". மூப்படைந்த பின் தங்களைப் பற்றி தாமே உயர்வாக உணர ஏதாவது செய்ய விரும்புவரே தவிர இதுபோன்ற நுட்பங்களில் உண்மையில் ஆர்வம் காட்டுவதில்லை." என்றார். தம் தேவைகளைப் அடைவதில் அவர்கள் பெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். அத்தகைய நபர்கள் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டாம் என்றும், அதையும் மீறி வாசித்தால் குறைந்தபட்சம் மின்னல் குறியீட்டின் மூலம் குறிக்கப்பட்டிருக்கும் அத்தியாயங்களை தவிர்த்துவிடுமாறு தயக்கத்துடன் அறிவுறுத்துகிறேன். இத்தருணத்தில் நான் இந்நூலிலுள்ள குறைபாடுகளை ஒப்புக்கொள்வது மற்றுமின்றி, ஆன்மிகப் பாதையில் என்ன சாத்தியம் என்பதைப் பற்றியறிய ஒரு உன்னதமான அழைப்பு, மற்றும் எச்சரிக்கையை விடுக்கிறேன்.
அறத்தின் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டவர்கள் வழமையாக எதிர்பார்க்கும் மென்மையான "அறக் குரலில்" பேசவும் எழுதவும் மறுத்தேன் என்று நான் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன். அவ்வாறான படப்பு ஒருவேளை வெளித்தோற்றத்தில் தேவைப்படலாம். தமக்கு தேவையான மற்றும் கிடைக்கக்கூடிய திறமையான வழிமுறைகளால் மக்கள் தம்மால் இயன்றவரை தம் துன்பங்களை அகற்றுவதில் நான் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளேன் என்று உறுதியளிக்கிறேன். உண்மையிலேயே இதற்கான ஆழ்ந்த நுட்பங்களை பகிர்வதில் எனக்கு அதீத உற்சாகமுள்ளது. எனவே இந்நூலின் இலவச பதிப்பை இணையத்தில் கிடைக்கச்செய்து, மற்றும் இந்த விசித்திரமான கடினமான அறப்பாதைகளில் செல்ல விரும்பமுள்ள சக பயிற்சியாளர்கள் அறத்தைப் பகிர்ந்துகொள்வதற்கும் அதை ஒன்றாக ஆராய்வதற்கும் ஒரு இணைமன்றத்தை இலவசமாக நடத்தி அதற்கு ஆதரவும் கொடுத்து வருகிறேன்.
இந்த புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு வேறு உந்துதல்களும் இருந்தன. ஒரு சிலர் என்னை தம் தியான ஆசானாக்கிக் கொள்ள முயற்சித்தனர். அவர்களை நன்றாகப் பயிற்சி செய்யவும், பின்வாங்கவும் (அன்றாட வாழ்விலிருந்து சிலநாட்கள் விலகி அறப்பயிற்சியில் முழுநேரமும் ஈடுபட்டு அதைச்சிறந்து பழகி மீண்டும் வாழ்விலிணைவது), ஆராயவும் ஊக்குவிக்க என்னால் இயன்றதைச் செய்துள்ளேன். ஆனால் அவர்கள் உண்மையில் அறவழியில் பயிற்சிக்காமலோ அல்லது என்னை தெய்வமாக்கி தலையில் தூக்கிவைத்து ஆட முயற்சிக்கிறார்கள் என்ற உணர்வு எனக்கு வந்தால் நான் அவர்களுக்கு உதவுவதை தவிர்த்து, அவர்களை தம்முள் நோக்கக்கூறி, இடமாற்றீட்டால் ஏற்ப்படும் சிதைவுகளைச் சுட்டிக்காட்டி, அறத்தைப் பற்றி வேறெங்காவது கற்றுக்கொள்ளுமாறு திருப்பியனுப்பியிருக்கிறேன். இவ்வாழ்க்கையின் மறைபொட்களை ஒன்றாக ஆராயந்து கற்க வேறு எவ்வகையான உறவுகளையும் விட அறநண்பர்களாக சமமட்டத்தில் பயணிப்பதையே விரும்புகிறேன். குறிப்பாக நம்மிரு (பயிலும் மற்றும் உதவும்) தரப்பினரையும் வலுவிழக்கச் செய்யும் உறவுகளிலிருந்து விலகி நிற்க நான் மிகவும் விரும்புகிறேன்.
அறநண்பர்கள் நடைமுறையில் வெவ்வேறு நிலைகளில் இருக்கலாம் மற்றும் ஒரு நண்பர் மற்றொருவருக்கு பயனுள்ள ஒன்றைக் கற்பிக்கலாம். இவ்வாறான உறவு முறையாக "ஆசிரியர்" மற்றும் "மாணவர்" என்று கூறப்படும் உறவுகளிலிருந்து மிகவும் மாறான உணர்வைக் கொண்டுள்ளது. எனவே, இந்நூலை எழுதுவதுவதன் மூலம், எனக்குத் தெரிந்தவற்றின் சிறந்த பகுதியை அவர்களிடம் ஒப்படைக்கவும், "நீங்கள் உண்மையிலேயே அதில் ஈடுபட்டிருந்தால், நீங்கள் அக்கறை கொள்ளும் அளவுக்கு ஆழமாக மூழ்குவதற்கு போதுமானதை விட இந்நூலிலும் மற்றும் இந்நூலில் சேர்க்கப்பட்ட குறிப்புகளிலும் உள்ளன" என்று கூற வழிவகுத்துள்ளது. இல்லையெனில், நான் எனது நேரத்தை வீணடித்துவிட்டேன் என்று நான் நினைத்துக்கொண்டு, மேலும் சில விசித்திரமான மற்றும் ஆபத்தான பீடங்களில் அல்லது தூண்களில் குறைந்தபட்சம் என் முகம் வைக்கப்படுவதைத் தவிர்க்க முடியும்.
இதைக்கூறிய பிறகு, இந்நூலிலுள்ள அனைத்து உள்ளுருமங்களிலும் உங்களை நிபுணர் ஆக்குவது என் குறிக்கோள் என்பதையும் நான் கூறிக்கொள்கிறேன். தமது தனிப்பட்ட அனுபவங்களை மக்கள் பகிர்துகொண்டு பயிற்றுவித்தால் இன்னும் அதிக மக்கள் அதே ஆர்வத்தோடு அறத்தைப் பயின்று மகிழ்ந்து தம்வாழ்வை மேம்படுத்தி இவ்வுளகத்தையும் அறிவார்ந்ததாக மாற்றுவர் என்பது என் எண்ணம். மேலும், இவ்வாறாக அறத்தை ஆழ்ந்து கற்று பயிலுபர்வகளுடன் பழகி உறையாடுவதென்பது மிகவும் இன்புறக்கூடிய செயல்.
இது அதிகார அடுக்கமைவின் மீதுள்ள விவாதத்திற்கு வித்திடுகிறது. எளிய சிக்கல்கள் என்னவென்றால், ஒருசாரார் ஆழ்ந்த புரிதலுக்கான திறன்களிலும், மனதைப் பல்வேறு வழிகளில் மாற்றியமைக்கும் திறன்களிலும் பந்நிலையில் சிறப்பாளுமை கொண்டுள்ளனர். மற்றொருசாரார் இதையடையாதார். மனச்செறிவாக்கலில் அதீத ஆற்றல் படைத்தோர், மற்றும் படைக்காதோர். ஒழுக்கநெறியில் சிந்தனையும் அக்கரையும் கொண்டுள்ளவர், மற்றும் கொள்ளாதோர். சில நுட்பங்கள் மற்றும் பயிற்சிகளில் சிறந்து விளங்குவோர் மற்றும் விளங்கார் எனப் பல்வேறு வகைப்பட்டோர் உண்டு.
ஆன்மீக உலகில் (அல்லது வேறு எந்தப் பகுதியிலும்) அனைவரும் சமம் என்று கற்பனை செய்ய மேற்கத்திய நாடுகளில் ஒரு விசித்திரமான பரவலான இயக்கம் இருந்தாலும், அது முற்றிலும் மருங்கிய, தவறான கண்ணோட்டம். என் பயிற்சி மற்றும் உதவிக்கு ஆசிரியர்களையும் நண்பர்களையும் தேடிச் சென்றபோது, சிலர் என்னை விட அதிகம் தெரியும் என்பதால், அவர்கள் மேல் கோபப்படுவதை விட, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கற்கும் வாய்ப்பு, அரிதாயிருப்பினும், அது கிட்டியதால் நான் உற்சாகமடைந்தேன். மற்றொரு எச்சரிக்கைப் பின்குறிப்பை: இந்நடைமுறைகளில் நீங்கள் போதுமான அளவு தேர்ச்சி பெற்று அதைப் பற்றி நீங்கள் பேசினால், பலர் உங்களை கடுமையாக எதிர்ப்பர். உங்கள் சாதனைகளை அகத்தூண்டுதலுக்குரியதான மற்றும் அதிகாரமளிப்பதற்கான ஒரு ஆதாரமாகக் கண்டறிபவரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும்.
அதே பொருளில், என்னைச் சுற்றியிருப்பவர்களிடமிருந்து இருந்து மொழியில், அனுபவங்களில், மனக்கண்ணோட்டத்தில், இயலுருத்தோற்றத்தில் நான் முற்றிலும் மாறுபட்டிருப்பது ஒரு நொதுமலான உண்மை. அறப்பயிற்சியில் பயன்விளைவுகளையும், ஆழ்ந்த உள்ளூருமங்களையும் பற்றி சிந்திதல், உரையாடுதல் என்பது என்னைப் பொருத்தமட்டில் ஒரு இயல்பான செயல். அரியமுயற்சிகளுக்கு சிலர் எப்படி ரசிகர்களாக இருக்கின்றனரோ, இவ்விடத்தில் அம்முயற்சியானது அறிநிலையையும் கவனத்தையும் மேம்படுத்துவதாக இருப்பதால், அனைவரும் இதில் ஆழ்ந்த ஈடுபாடற்றிருப்பர் என எண்ண இயலவில்லை. சில நொதுமலான காரணங்களால் ஏனோ பலருக்கு இதில் ஈடுபாடில்லை என்பதுவே உண்மை.
இதை மற்றுமொறு எச்சரிக்கையாகவும் நீங்கள் புரிந்துகொள்ளளாம்: இப்பாதையில் செல்வோர் தனிமையை மட்டுமே தம் பக்கம் கொண்டிருக்க வாய்ப்புண்டு. நற்பேறாக இணையம் இவ்வகையான சமூக மக்களை (அறம் பயில்வோரை) ஒன்றினைத்து ஒருவருக்கொருவர் உதவுவதற்கு தளமமைத்துள்ளது. இருப்பினும் இக்காய உலகம் இன்னும் இத்தளங்களிருந்து மிகவும் பின் தன்ங்கியுள்ளது, ஆதலில் இட்ட எச்சரிக்கை சரியானதே.
மற்றுமொறு எச்சரிக்கை: இந்நூலும் இந்நூலில் குறிப்பிடுள்ள பயிற்சிகளும் உறுதியற்ற அன்மீக ஆய்வார்வலர்க்கு அல்ல. நான் விளக்கவிருக்கும் உயர்நிலை தியான நிலைகள் அடிநிலை சித்தம் மற்றும் பொருள் உறுதியுள்ளோருக்கானது. பொருளைப் பொருத்தவறை செல்வமன்று, நெறிமுறைக்கு உட்பட்டு பெற்ற வாழ்வாதாரங்களான உணவு, பாதுகாப்பான உகந்த உறைவிடம். உங்கள் உளவியல் பயனங்களை கவனமாகக் கொண்டுச் சென்று செறிந்த நுட்பங்களையும் பக்க விளைவுகளையும் பலன்களையும் கையாண்டு ஒருங்கிணைக்க வேண்டும்.
மென்மையான நுட்பங்களும் அவற்றை பயிற்றுவிக்கும் பள்ளிகளும் உள்ளன. அவை உங்கள் திறமைக்கு மற்றும் படிப்படியான பயிற்சிக்கு ஏற்றவாறு இருப்பின் அவற்றை பின்பற்றவும். மற்றும் உளவியல் பாதிப்புகளை சிறந்து குணப்படுத்தும் பலவகையான நுட்பங்களும் பயிற்ச்சிக்கான தடங்கல்களை நீக்கும் உத்திகளையும் அவர்கள் பயிற்றுவிப்பர். இந்நூலிலுள்ள நுட்பங்களும் அதன் இடுமானங்களும் உறுதியான மனவளத்தில் இருப்பது மட்டுமல்லாது கடுமையான பயிற்சிகளின் விளைவாக வரும் இடர்களையும் ஏற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
வெளிப்படைகக் கூறினால்: கடுமையான மற்றும் தீவிரமான பயிற்சியை மேற்கொள்பவர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளலாம். தீவிர விளையாட்டு வீரர்கள் சிறிது தவறாக நடக்கும்போது அல்லது தங்கள் வரம்புகளுக்கு அப்பால் தங்களைத் உந்தும்போது அவர்களின் உடலை காயப்படுத்தலாம். அதுபோலவே தீவிர மன விளையாட்டு வீரர்கள் தங்கள் மனதையும், மூளையையும், நரம்பு மண்டலங்களையும் வாட்டலாம், மேலும் பதட்டமான மூளை சில சமயங்களில் மிகவும் விசித்திரமான வழிகளில் செயல்படலாம்.
"உங்களை நீங்களே வறுத்தெடுப்பது" என்பதன் மூலம், நான் வெளிப்படையாக கூறிக்கொள்வது என்னவென்றால் கடுமையான மனநிலை உறுதியற்ற தன்மை மற்றும் முதிர்-மனநோய் நிகழ்வுகள். அத்துடன் பிற விளக்கமற்ற உயிரியல் மற்றும் சித்தஆற்றல் இடையூறுகள். பயிற்சியாளர்கள் சிலநேரங்களில் மனநல மருத்துவகங்களில் பல்வேறு காலகட்டங்களில் சென்றடைகின்றனர். இது எவ்வளவு இயற்கையானது (அவர்கள் பிறப்பால் மற்றும் மனநோய்க்கான சாத்தியக்கூறுகளால்), எவ்வளவு தம் பயிற்சியால் (இந்நூலில் குறிப்பிட்டுள்ள கடினமான தியான நுட்பங்களை அதிக அளவு பயிற்சித்தல்), மற்ற அடையாளம் தெரியாத காரணிகளுடன் எவ்வளவு தொடர்புடையது என்பது இன்னும் ஆய்வுக்குட்பட்ட கேள்வி. தீவிர தியானத்திற்கு இது பொருந்தும் என்பதால், நவீன அறிவியலில் இன்னும் வளர்ந்து வரும் நிலைகளைப் பற்றி நீங்கள் எந்த வகையிலும் அறியாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இவற்றைத் தெரிவிக்கிறேன்.
இந்நூலைப் படித்த சிலர், முந்தைய செய்தியை மட்டுமே கவனித்திருக்கிறார்கள். உங்களால் முடிந்த வல்லமையின் மற்றும் தீர்மானத்தின் ஆழத்தைக் கண்டறிவது (அவர்களின் உள்ளார்ந்த திறனைக் குறைவாகப் பயன்படுத்துபவர்கள் அல்லது அங்கீகரிக்காதவர்கள் நிறைந்த கலாச்சாரத்தை சமநிலைப்படுத்த ஒரு செய்தி) மற்றும் எப்படி, எப்போது பின்வாங்குவது என்று விவாதிக்கும் பகுதிகளை அவர்கள் தவறவிட்டார்கள். இதை இந்நூலில் பல இடங்களில் சொல்லியுள்ளேன் ஆனால் அவர்களின் அவசர குணத்திற்கு அகப்படவில்லை. இதை இங்கு முன் வைப்பது, மக்கள் இரண்டு செய்திகளையும் கேட்கவும், இரண்டுக்கும் இடையே உள்ள சமநிலையைக் கண்டறியவும் உதவும் என்று நம்புகிறேன், ஏனெனில் நன்மைகள் மட்டுமின்றி ஆபத்துகள் பற்றியும் மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். முடிவுகளை அறிவித்து அதன்படி நடைமுறைப்படுத்துங்கள். சரியான பயிற்சி, ஸ்பாட்டிங் மற்றும் நுட்பம் இல்லாமல் பலு தூக்க செய்ய நீங்கள் விரும்ப மாட்டீர்கள். அதேபோல் அதிக கவனமான பயிற்சி, நீட்சி, நீரேற்றம், சிறந்த ஊட்டச்சத்து மற்றும் பலவற்றின்றி மாரத்தான்களை ஓட மாட்டீர்கள்: ஆழ்ந்த தியானப் பயிற்சியும் அதேபோலத்தான்.
அறத்தைப் பற்றிய எனது அணுகுமுறையை புத்துணர்ச்சியூட்டும், வல்லமையளிக்கும், தெளிவான, நடைமுறை, நேர்மையான, சமத்துவ மற்றும் திறந்த மனதுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதை செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளேன்.
இங்கு பட்டியலிட முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தாலும், இந்த வேலையைச் செய்வதற்கு செல்வாக்கு, நட்பு, ஆதரவு மற்றும் இரக்கம் காட்டிய பல நபர்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். இது ஒன்றுக்கொன்று சார்ந்துள்ள அண்டம், எனவே இந்த வேலை என்னால் மட்டுமே செய்யப்பட்டது என்று எழுதுவது இயல்நிலைக்கு ஒத்துவராது. இங்கு வழங்கப்பட்ட கருத்துக்களில் எனது தொகுப்பு, அமைப்பு மற்றும் நிகழ்வுகள், எனக்கு முன் வந்தவர்களிடமிருந்தும், சமகால பயிற்சியாளர்களிடமிருந்தும் எனக்கு கிடத்த உளப்பாடுகள். கரோல் இங்ரம், சோன்ஜா பூர்மன், டேவிட் இங்கரம், கிறிஸ்டினா ஜோன்ஸ், கிறிஸ்டோபர் டிட்மஸ், ஷர்தா ரோஜெல், பில் ஹாமில்டன், கென்னத் ஃபோக், ராபர்ட் பர்ன்ஸ், டாரின் கிரேகோ, வின்ஸ் ஹார்ன் மற்றும் தர்மா ஓவர்கிரவுண்டில் எனது மற்ற நண்பர்களின் குறிப்பிட்ட ஆதரவைக் குறிப்பிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். மற்றும் அதன் சகோதரி தளங்கள், இவை அனைத்தும் இந்த புத்தகத்தில் உள்ள நல்லவை மற்றும் எனது சொந்த நடைமுறையை சாத்தியமாக்குவதில் மிகவும் கருவியாக இருந்தன.
இந்த இரண்டாம் பதிப்பிற்காக எனது பெயரிலா முதன்மை ஆசிரியருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய நீண்ட மணிநேர கடின உழைப்பு, இரக்கம், ஞானம், இதயம், பொறுமை, கோட்பாடு மற்றும் நடைமுறையில் அறத்தின் மீதான ஆழ்ந்த பணிவு ஆகியவை இந்த புத்தகத்தை ஒரு அடையமுடியாத நிலைக்கு உயர்த்த உதவியது. இந்நூலை ஆதரித்து, சிக்கலில் இருந்து பாதுகாக்க உதவிய ஒரு பெயரிலா புரவலருக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டங்கன் பார்ஃபோர்ட், ஜெர்மி லெஹ்ரர், ஷானன் ஸ்டெயின், எலிசபெத் பக், ஆன் கிரெய்க், பீட்டர் ஸ்டக்கிங்ஸ், ஜான் ஹவ்லி, ரோஜர் வின்ட்சர், டேனியல் ரிஸ்ஸுடோ, மைக்கேல் வேட் ஆகியோரின் திருத்தல் உதவிக்காகவும், பல்வேறு எழுத்துப் பிழைகள், சிக்கல்கள், முரண்பாடுகள், பிழைகள் மற்றும் பல வழிகளில்ல் உதவியாக இருக்கும் என்பன குறித்து எனக்குக் கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். புத்தகத்தை வெளியிட்டதற்கும் பொறுமையாக இருந்ததற்கும் ஏயோனில் உள்ள ஆலிவர் ராத்போன் மற்றும் செசிலி பிளெஞ்ச் ஆகியோருக்கு நன்றி, மேலும் அதை வெளியிட பரிந்துரைத்த ஆலன் சாப்மேனுக்கு நன்றி. இருப்பினும், இந்த வேலையில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதற்கான பொறுப்பு என் மீதுதான் இருக்க வேண்டும். இந்த நல்ல மனிதர்கள் அனைவரும் தங்கள் பெயர்களை இந்த வேலையுடன் இணைக்க விரும்புவார்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது, இருப்பினும் எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்கும் உரிமை எனக்கு உள்ளது. அட்டைப்படத்திற்கு எனது வளர்ப்பு மகனான இயன் பிளேக்லிக்கு (SEAMO) நன்றி.
ஆங்கில எழுத்து நடைகுறிப்புகள் தமிழாக்கத்திற்கு பொறுந்தாததால் இரு பத்திகளை மொழி பெயர்க்கவில்லை. விருப்பமுள்ளவர்கள் MCTB2 ஆங்கில நூலைப் படிக்கவும்.
இப்பணி அனைத்து உயிர்களின் நன்மைக்காக இருக்கட்டும். உங்கள் பயிற்சி அனைத்து உயிர்களின் நன்மைக்காக இருக்கட்டும். எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்ய விரும்புவீராக. நீங்கள் உண்மையிலேயே எதைத் தேடுகிறீர்கள் என்பதை உணர்ந்து, எல்லாத் தடைகளையும் மீறி இடைவிடாமல் அதைத் தொடரவும், அதை அடையவும் விழைகிறேன்.